சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
By: Nagaraj Tue, 29 Dec 2020 8:22:03 PM
ஆருத்ரா தரிசன தேரோட்டம்... சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 21ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவின் தேரோட்டம் நடைபெற்றது.
சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். நாளை புதன்கிழமை அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.
நடராஜர் கோயிலில் கடந்த டிச.21-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்கியது. 9-ம் நாளான இன்று நடைபெற்ற தேர்த்திருவிழாவை முன்னிட்டு சித்சபையில் உள்ள மூலவர்களான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவர்கள் சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித் தனி தேர்களில் அதிகாலை எழுந்தருளினர்.
பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 9 மணிக்கு தேர்கள் புறப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தேர்கள்
தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாகத் தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாலை
கீழவீதி தேர்நிலையை அடைந்தன.
தேர்களுக்கு முன்பு வீதிகளில் இந்து
ஆலய பாதுகாப்புக்குழுவினர், தில்லைத் திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு
நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை
நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணியை மேற்கொண்டனர்.
நாளை
டிச.30-ம் தேதி புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் ஆயிரங்கால்
மண்டப முகப்பில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு
மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும். ஸ்வர்ணாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது.
பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய
பூஜையும் நடைபெறுகிறது. அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர்
பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள
ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு
நடனப்பந்தலில் நடணமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்து, சித்சபா பிரவேசம்
செய்கின்றனர்.