Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நம்பிக்கைத் துரோகியின் படத்தில் ஏன் நடிக்க வேண்டும்? விஜய்சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்

நம்பிக்கைத் துரோகியின் படத்தில் ஏன் நடிக்க வேண்டும்? விஜய்சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்

By: Monisha Thu, 15 Oct 2020 4:23:51 PM

நம்பிக்கைத் துரோகியின் படத்தில் ஏன் நடிக்க வேண்டும்? விஜய்சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான '800' என்ற திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில் தற்போது பாரதிராஜாவும், இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என விஜய்சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து விஜய்சேதுபதிக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது, வணக்கம். மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் .. கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன். நிற்க.

தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர். விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்?

traitor,muthiah muralitharan,biography,bharathiraja,letter ,நம்பிக்கைத் துரோகி,முத்தையா முரளிதரன்,வாழ்க்கை வரலாறு,பாரதிராஜா,கடிதம்

எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான். அடிபட்ட வலியை நினைவுகூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்? மறுத்திருக்கலாமே... என கேட்கின்றனர். அவர்களின் வேதனையும் வலியும் புரியும் அதேசமயம் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன். இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா?

எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள். தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவுகொள்ளப்படுவீர்கள். இவ்வாறு பாரதிராஜா அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இந்த வேண்டுகோளை ஏற்றி விஜய்சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகுவாரா? என்று பார்ப்போம்.

Tags :