Advertisement

அதிக விலைகொடுத்து பட்டுப் புடவை வாங்கும்போது கவனம் தேவை!

By: Monisha Wed, 30 Dec 2020 5:07:53 PM

அதிக விலைகொடுத்து பட்டுப் புடவை வாங்கும்போது கவனம் தேவை!

பட்டுப்புடவை எல்லா பெண்களுக்கும் பிடித்தமான பாரம்பரிய உடை. பாரம்பரியத்தை விரும்பும் அனைத்து பெண்களும் பட்டுப் புடவையை கட்டாயம் விரும்புவார்கள். ஆனால் இந்த பட்டுப் புடவையின் விலை சற்று அதிகம். இதனால் தரமான பட்டுப் புடவையை நாம் தேர்ந்தெடுப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். திருமண காரியங்களுக்கு பட்டுப் புடவை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. திருமண வீடுகளில் பட்டுப் புடவை இன்றி திருமணம் நடைபெறாது.

பார்ப்பதற்கு ஒரே மாதிரியான பட்டுப் புடவையின் விலை, கடைக்குக் கடை வேறுபடும். அதனால், பட்டின் தரம் குறித்து எப்போதும் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். நகையில் கலந்திருக்கும் தங்கத்தைப் போலவே, பட்டுப் புடவையின் தரத்தைப் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் குழப்பங்கள் ஏற்படும். ஒரு நல்ல பட்டுப் புடவை வாங்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

பட்டுபோல ஜொலிக்கிறது என்பார்கள். ஆனால், பளபளப்பது எல்லாம் நல்ல பட்டுப் புடவை அல்ல. அதனால், வெறும் பளபளப்பை மட்டுமே கருத்தில்கொண்டு புடவையை தேர்ந்தெடுக்க முடிவு செய்யக்கூடாது. பட்டு நூலின் விலை, தயார் செய்வதற்கான கூலி உட்பட செலவுகள் அதிகம். அதனால், ரொம்பவும் மலிவான விலையில் பட்டுப் புடவைகள் தருவதாகச் சொன்னால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

silk saree,tradition,women,attention,price ,பட்டுப் புடவை,பாரம்பரியம்,பெண்கள்,கவனம்,விலை

ஏனெனில், சிலர் 2,000 ரூபாய்க்கும் குறைவாகப் பட்டுப் புடவையின் விலையைக் கூறுவார்கள். ஆனால், மிகக் குறைந்த அளவு நல்ல பட்டு நூல் கொண்டு தயாரித்த பட்டுப் புடவை என்றாலும் குறைந்தபட்சம் 3,500 ரூபாய்க்குத்தான் விற்க முடியும். இதேபோல, நிறைய டிசைன் உள்ள புடவைக்கு விலையை மிகக் குறைத்துச் சொன்னாலும், அதன் தரம் பற்றி சந்தேகம்கொள்ள வேண்டும்.

சிலர், டிசைனை வைத்து பட்டுப் புடவைக்கு பெயர்கள் வைத்திருப்பார்கள். ஆனால், என்ன பெயர் வைத்தாலும் பட்டு நூல் தரம் ஒன்றுதான். அதனால், பெயரை மட்டும் வைத்து, பட்டின் தரத்தை முடிவு செய்யக்கூடாது. பட்டு என்பது நான்கு வகைகள்தான். மல்பெர்ரி வகைகளே நம் பகுதியில் அதிகம் கிடைக்கக்கூடியது.

பட்டுப் புடவையின் அளவுகளைச் சோதித்து வாங்குவது நல்லது. பொதுவாக, புடவையின் நீளம் சராசரியாக ஐந்தரை மீட்டரும் ஜாக்கெட்டுக்கு 70 சென்டிமீட்டரும் ஆக, 6.20 மீட்டர் இருக்க வேண்டும். அகலம் 47 முதல் 50 இன்ச் இருக்கும். நீளம், அகலம் குறைவான புடவைகளும் விற்பனை செய்யப்படலாம். எனவே, கவனத்துடன் இருப்பது நல்லது.

silk saree,tradition,women,attention,price ,பட்டுப் புடவை,பாரம்பரியம்,பெண்கள்,கவனம்,விலை

ஜரிகையில் பிளாஸ்டிக், ஆஃப் ஃபைன், ப்யூர் அல்லது சில்வர் என மூன்று வகைகள் இருக்கின்றன. இவற்றில், சில்வர் ஜரிகைதான் விலை அதிகமானது. சில்வர் மீது தங்க முலாம் பூசப்பட்டிருக்கும். சில்வர் ஜரிகை ஒரு கிராம் 45 ரூபாய் என்றால், ஆஃப் ஃபைன் ஜரிகை 3 ரூபாய்தான் இருக்கும். அதனால், என்ன வகையான ஜரிகை என்று கேட்டு வாங்க வேண்டும். நல்ல ஜரிகை உள்ள ஆஃப் ஃபைன் பட்டுப் புடவை 10 ஆயிரம் ரூபாய் என்றால், அதே அளவு சில்வர் ஜரிகை உள்ள பட்டுப் புடவை 70 ஆயிரம் ரூபாய் வரை ஆகலாம். புடவை முழுக்க ஜரிகை இருந்தால், மற்ற புடவையைக் காட்டிலும் விலை அதிகமாக இருக்கும். அதனால் ஜரிகை அதிகமிருந்தும் விலை குறைவாக இருக்க வாய்ப்பில்லை.

மத்திய அரசின் சில்க் மார்க் முத்திரை, ஹேண்ட்லூம் முத்திரை உள்ளிட்டவை இருக்கும் புடவைகளின் தரத்தை நம்பி வாங்கலாம். இவ்வளவும் கவனித்து, வாங்கிய புடவையை, யாரேனும் 'விலை அதிகம் கொடுத்து வாங்கி ஏமாந்துவிட்டாய்' எனச் சொனால், அதை நம்பி குழம்பிவிட வேண்டாம்.

மல்பெர்ரி, டஸ்ஸார், எர்ரி, மூகா என நான்கு வகையான பட்டுகள் இருக்கின்றன. இதில் மல்பெர்ரி வகை மட்டுமே, வளர்ப்பு முறையிலான பட்டுப் பூச்சிகளிலிருந்து எடுக்கப்படும் இழை. மற்றவை அடர்ந்த காடுகளில் உள்ள பட்டுப்பூச்சிகளிடமிருந்து கிடைக்கக்கூடிவை. தமிழகத்தைப் பொறுத்தவரை, மல்பெர்ரி வகை பட்டே விற்பனையில் கிடைக்கின்றன. மற்ற வகைகள் கிடைப்பது அபூர்வம் விலையும் அதிகம். பட்டு நூலை, எரிக்கும்போது, மெதுவாக எரிந்து, தானாக அணைந்துவிடும். முடி கருகும் வாசனை வரும். அதன் சாம்பல், கறுமையான நிறத்தில், உருண்டு பளிச்சென்று இருக்கும். விரலால் அழுத்தினால், தூள் தூளாகிவிடும்.

Tags :
|