Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கர்ப்பக் காலத்தின் நிறைவு மாதத்தின் போது கவனிக்க வேண்டியவை

கர்ப்பக் காலத்தின் நிறைவு மாதத்தின் போது கவனிக்க வேண்டியவை

By: Karunakaran Tue, 06 Oct 2020 3:47:52 PM

கர்ப்பக் காலத்தின் நிறைவு மாதத்தின் போது கவனிக்க வேண்டியவை

கர்ப்பக் காலத்தின் நிறைவு மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம். இந்த காலகட்டத்தில் குழந்தை முழு வளர்ச்சி பெற்றிருக்கும். போலியான பிரசவ வலியும் ஏற்படலாம். பத்தாம் மாதத்தில் முழு வளர்ச்சியடைந்த குழந்தையை தாய் சுமப்பதால் அவரை நிறைமாத கர்ப்பிணி என்று அழைக்கிறோம். நடக்கவே சிரமமாக இருக்கும். பிறப்பு உறுப்பு பகுதியில் பிரசவத்திற்குரிய இயல்பான மாற்றங்கள் உருவாகும்.

சிறுநீர் பையை கர்ப்பப்பை முழுமையாக அழுத்துவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டியதிருக்கும். அதற்காக தண்ணீர் அருந்துவதை குறைத்துவிடக்கூடாது. சவுகரியமான முறையில், பாதுகாப்பான முறையில் கழிப்பறைக்கு சென்று வரவேண்டும். அடிக்கடி தொடைப்பகுதியிலோ, கால்களில் வேறு பகுதிகளிலோ தசைப்பிடித்தம் தோன்றும். இது இயல்பானதுதான். பயப்படவேண்டியதில்லை.போலியான பிரசவ வலி தோன்றலாம். அதனால் இயற்கையான பிரசவ வலி எப்படி இருக்கும் என்பதை பற்றி டாக்டரிடம் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும்.

final month,pregnancy,baby,delivery ,இறுதி மாதம், கர்ப்பம், குழந்தை, பிரசவம்

குழந்தை முதல் முறையாக கழிவை வெளியேற்ற தயாராகியிருக்கும். பச்சை கலந்த கறுப்பு நிறத்திலான பொருளை குழந்தை கர்ப்பப்பையின் உள்ளேயோ, பிறந்த உடனேயோ வெளியேற்றும். விட்டுவிட்டு வயிற்று வலியும், முதுகு வலியும், வயிறு முறுக்கிக்கொள்ளும் அவஸ்தையும் தோன்றும். நேரம் செல்லச்செல்ல இந்த நிலை அதிகரிக்கும். அதே நேரம் பிறப்பு உறுப்பில் இருந்து ரத்தம் கலந்த திரவம் வெளியேறும். சிலருக்கு பனிக்குட நீரான அம்னியோட்டிக் திரவம் வீட்டில் இருக்கும்போதே வெளியேறத் தொடங்கிவிடும். அப்படிப்பட்ட சூழலில் உடனடியாக மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்திடவேண்டும். முதல் பிரசவம் 10 முதல் 12 மணி நேரம் வரை நீளும்.

பத்தாம் மாதத்தில் வாரந்தோறும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். குழந்தையின் இருப்பு நிலை, கர்ப்பப்பை நிலை, பிறப்பு உறுப்பு நிலை போன்றவைகளை மருத்துவர் பரிசோதிப்பார். பத்தாம் மாதத்தில் ஸ்கேன் செய்தால் குழந்தையின் வளர்ச்சி மற்றும் எடையை துல்லியமாக அறியலாம். எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாத கர்ப்பிணியாக இருந்தால், பிரசவ வலி தோன்றும்போதோ- அதற்குரிய சூழ்நிலைகள் உருவாகும்போதோ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றால் போதுமானது.


Tags :
|