தடுப்பூசிகள் சேமிக்க தீவிரம் காட்டுகிறோம்; யுனிசெப் தகவல்
By: Nagaraj Wed, 21 Oct 2020 3:48:28 PM
அடுத்த ஆண்டுக்குள் 100 கோடி தடுப்பூசிகளைக் கொண்டுச் செல்வதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறோம் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்ப் பரவலின் வேகம் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சில நாட்களாக அமெரிக்காவில் புதிய நோய்த் தொற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்போர் எண்ணிக்கை 4 கோடியே 10 லட்சத்து 43 ஆயிரத்து 648 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 29 ஆயிரத்து 600 பேர்.
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 6 லட்சத்து 29 ஆயிரத்து 580 நபர்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 92,84,468 பேர்.
கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க தடுப்பூசி மட்டுமே தீர்வு எனும் நிலையை
நோக்கி உலக நாடுகள் சென்றுகொண்டிருக்கின்றன. ரஷ்யா உலகின் கொரோனா
தடுப்பூசியைக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்து பதிவு செய்துவிட்டது. இந்த
ஆண்டு இறுதிக்குள் சீனாவின் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வரும்
வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கொரோனா தடுப்பு மருந்து
நடைமுறைக்கு வரும்பட்சத்தில் அதை உலகில் எங்கு தேவைப்படுகிறதோ, அங்கு
சரியான அளவில் சேர்க்கும் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது ஐநாவின்
யுனிசெப். இந்நிலையில் யுனிசெப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'அடுத்த
ஆண்டுக்குள் 100 கோடி தடுப்பூசிகளைக் கொண்டுச் செல்வதற்கான ஏற்பாடுகளில்
தீவிரம் காட்டி வருகிறோம். மேலும் 50 கோடி தடுப்பு மருந்துகளை சேமிப்பில்
வைக்க இடம் தயார் செய்துவருகிறோம்.
தடுப்பூசி போடப்படும் காலத்தில்
ஊசி தட்டுப்பாடு வரக்கூடும் என்பதால் இப்போதே ஊசி வாங்கிச் சேமிக்கத்
தொடங்கி விட்டோம்' என்று தெரிவித்துள்ளது.