தேனி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 164 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
By: Monisha Sat, 06 June 2020 6:20:25 PM
இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர். மேலும் பலர் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு தங்கள் உயிரையும் பறிக்கொடுத்தனர். இதனையடுத்து மத்திய அரசு சிறப்பு ரெயில்களை இயக்க முன்வந்தது.
தற்போது ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, தேனி மாவட்டத்தில் பல்வேறு கட்டமாக வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் நேற்று தேனி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 164 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக அவர்கள், சிறப்பு பஸ்களில் தேனியில் இருந்து மதுரை ரெயில் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு ரெயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அனுப்பி வைக்கும் முன்பு அவர்கள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.