சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் 197 பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
By: Nagaraj Thu, 06 Aug 2020 08:45:28 AM
கடந்த ஆண்டு நடைபெற்ற, 'சிவில் சர்வீசஸ்' தேர்வுகளில், 197 பெண்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட, 'சிவில் சர்வீசஸ்' பணியிடங்களுக்கான தேர்வு களை, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வின் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாயின. இதில், ஐ.ஆர்.எஸ்., எனப்படும், இந்திய வருவாய் சேவை பிரிவு அதிகாரியாக பணியாற்றும், பிரதீப் சிங் முதலிடம் பெற்றுள்ளார்.
மூன்றாம் இடத்தை பெற்றுள்ள, ஐ.ஆர்.எஸ்., அதிகாரியான பிரதிபா வர்மா,
தேர்ச்சி பெற்ற பெண்களில், முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில், தேர்வில்
வெற்றி பெற்ற பெண்களின் எண்ணிக்கை, 2018ம் ஆண்டுடன் ஒப்பிடும் நிலையில்
சற்று அதிகரித்துள்ளது. இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
ஐ.ஏ.எஸ்.,
உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணியிடங்களுக்கான தேர்வில், 2018ம் ஆண்டு, 577
ஆண்கள் மற்றும் 182 பெண்கள் என, 759 பேர் தேர்ச்சி பெற்றனர். பெண்களின்
தேர்ச்சி விகிதம், 23.9 சதவீதமாக இருந்தது. நேற்று முன்தினம் வெளியான
முடிவுகளில், 632 ஆண்கள், 197 பெண்கள் என, 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில்
பெண்களின் தேர்ச்சி விகிதம், 23.7 சதவீதமாக இருந்தாலும், எண்ணிக்கை
அடிப்படையில், அதிக பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.சிவில் சர்வீசஸ் பணிகளில்,
பாலின சமநிலையை உருவாக்க, அரசு கருதுவதால், இத்தேர்வுகளில் பெண்கள் அதிகம்
பங்கேற்க வேண்டும் என, ஊக்குவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.