அசாமில் மழை வெள்ளத்தில் சிக்கி 68 பேர் பலியானதாக அறிவிப்பு
By: Nagaraj Fri, 17 July 2020 3:10:48 PM
அசாமில் மழை வெள்ளத்தில் சிக்கி 68 பேர் பலியாகி உள்ளனர்.
வட கிழக்கு மாநிலமான அசாமில், இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, இதுவரை, 68 பேர் பலியாகி உள்ளதாக, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
அசாமில், முதல்வர் சர்பானந்த சோனோவால் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, இரு தினங்களாக, கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மாநிலம் முழுதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்
கூறியிருப்பதாவது: கடந்த இரு தினங்களாக கொட்டி தீர்க்கும் கனமழையால், 30
மாவட்டங்களில், 4,500 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை, 68 பேர்
பலியாகி உள்ளனர்; 48 லட்சம் பேர், பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம்
முழுதும், 487நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. காசி ரங்கா தேசிய
வனவிலங்கு பூங்காவில், 66 விலங்குகள் உயிரிழந்துள்ளன. இவ்வாறு, அதில்
கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, மஹாராஷ்டிராவின் மும்பை நகரின் பல்வேறு
பகுதிகளில், நேற்று முன் தினம் காலை முதல், நேற்று காலை வரை, கனமழை கொட்டி
தீர்த்தது. தெற்கு மும்பையில், 15 செ.மீ., மழை பதிவானது. பாந்த்ரா,
மகாலட்சுமி பகுதிகளில், 20 செ.மீ., மழை பதிவானது.