கொடூரமான முறையில் 7 வயது சிறுமி கொலை - புதுக்கோட்டையில் பரபரப்பு
By: Monisha Thu, 02 July 2020 09:51:29 AM
புதுக்கோட்டையில் காணாமல் போன சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 31-ந் தேதி இரவு முதல் காணவில்லை. இதுதொடர்பாக ஏம்பல் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில், சிறுமியை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் அந்த சிறுமி ஏம்பல் கிளவி தம்மம் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வரத்து வாரியில் நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த ஏம்பல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரும் வந்து விசாரணை நடத்தினார். பின்னர், அந்த சிறுமியின் உடல், பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மோப்ப நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி ஒரு வீட்டுக்குள் படுத்து கொண்டது. இதனால், அந்த சிறுமியை அந்த வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கொடூரமாக கொலை செய்து இங்கு உடலை வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதியில் விசாரித்தபோது, சிறுமியை ஒரு வாலிபர் கறம்பவயல் காளிகோவில் பக்கம் அழைத்து சென்றதாக தெரிவித்தனர். அதன்பேரில், அந்த வாலிபர் மற்றும் இன்னொரு வாலிபரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.