வேறு நபரின் சான்றிதழ் மூலம் போலி மருத்துவம் பார்த்த நபர் கைது
By: Monisha Wed, 02 Dec 2020 11:55:40 AM
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பகண்டை கூட்டுரோடு அருகே லாலாபேட்டையில் பொது மக்களுக்கு பட்டா அளிப்பது தொடர்பாக ஆர்.டி.ஓ., சங்கீதா, சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தனர். அங்கு முருகன் என்பவர் வீட்டில் ஆய்வு செய்தபோது மூதாட்டி ஒருவருக்கு குளுக்கோஸ் செலுத்தப்படுவதை பார்த்து விசாரித்தனர்.
விசாரணையில், அதே பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த இளையராஜா(43) என்பவர் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரிக்குமாறு ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயபாலனிடம் அறிவுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மருத்துவக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இளையராஜா வேறு நபரின் சான்றிதழ் மூலம் 5 ஆண்டுகளாக மருந்து கடை நடத்தி ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மருந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டு இளையராஜாவை கைது செய்த போலீசார், மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பாப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.