அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கிடையேயான சண்டையில் இதுவரை 95 பேர் உயிரிழப்பு
By: Karunakaran Wed, 30 Sept 2020 7:03:46 PM
1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த பின்னர் அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகியவை தனித்தனி நாடுகளாக அறிவிக்கப்பட்டது. அர்மீனியாவில் கிருஸ்தவ மதத்தினரும், அசர்பைஜானில் இஸ்லாமிய மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர். இரு நாடுகளையும் எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் பெரும்பாலானோர் அர்மீனிய ஆதரவாளர்களே வாழ்ந்து வந்தனர்.
ஆனால், இந்த மாகாணம் அசர்பைஜானின் அங்கம் என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இதனால் இவர்கள் அசர்பைஜானில் இருந்து பிரிந்து சென்று அர்மீனியாவில் தான் சேரவேண்டும் என முடிவு செய்தனர். இதனால், சிறு குழுக்களாக இணைந்து அசர்பைஜானுக்கு எதிராக 1988 ஆம் ஆண்டு முதலே சிறு சிறு சண்டையில் ஈடுபட்டு வந்தனர். நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு அர்மீனியா மற்றும் அசர்பைஜான் இடையே போர் வெடித்தது.
இந்த போரில் நகோர்னோ-கராபத் மாகாணத்தின் பெரும்பகுதியை அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. அந்த மாகாணத்தை அர்மீனிய ஆதரவு மக்கள் நிர்வகித்து வந்தனர். மேலும், இதற்கு அர்மீனிய அரசும் உதவிகளை செய்துவந்தது. அன்றில் இருந்து நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா - அசர்பைஜான் இடையே மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நகோர்னோ-கராபத் மாகாணத்தின் தலைநகரான ஸ்டெபனாஹெட் பகுதியில் அசர்பைஜான் ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். நகோர்னோ-கராபத் மாகாணத்தில் அர்மீனிய ஆதரவு படையினருக்கும் - அசர்பைஜான் நாட்டின் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்டை காரணமாக பொதுமக்கள், இருநாட்டு படையினர் உள்பட பலர் உயிரிழந்து வருகின்றனர். தற்போது வரை, நகோர்னோ-கராபத் மாகாணத்தில் நடந்து வரும் சண்டையில் இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர். பதற்றத்தை தணிக்க அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.