இந்திய சுதந்திர தினத்தையொட்டி இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் வாழ்த்து
By: Karunakaran Sat, 15 Aug 2020 1:01:25 PM
இன்று இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பலரும் இந்தியவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் ஸ்காட் மாரிசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்திரேலியாவின் நீண்டகால நட்பு நாடு இந்தியா. இரு நாட்டு உறவுகள், நம்பிக்கை மற்றும் மரியாதையை அடித்தளமாக கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. இந்த நட்புறவு ஆழமானது என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது, நமது கலாசாரம் வேறுபட்டிருந்தாலும், நாம் ஒரே விஷயங்களில் நம்பிக்கை வைத்துள்ளோம் என்று கூறினேன். இந்த உறவை பிரதமர் மோடியும், நானும் மேலும் ஒருபடி உயர்த்தி உள்ளோம் என பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் டெல்லியில் சுதந்திர தினத்தையொட்டி, சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்திய பிரதமர் மோடி மக்களுக்கு சிறப்புரையாற்றி, பலருக்கு கௌரவ விருதை வழங்கி வருகிறார். மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படியே சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.