பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி குமரியில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
By: Monisha Wed, 24 June 2020 5:38:22 PM
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் விலையை நாளுக்கு நாள் உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், விலை உயர்வை வாபஸ் பெறக்கோரியும் குமரி மாவட்டத்தில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, ஆட்டோவுக்கான இன்சூரன்ஸ் கட்டணங்களை செலுத்த 6 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும். ஒவ்வொரு ஆட்டோ தொழிலாளிக்கும் மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும். வங்கிக் கடன், தனியார் நிதி நிறுவனக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் தொகையை செலுத்த காலஅவகாசம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) மாவட்ட தலைவர் வக்கீல் மரிய ஸ்டீபன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அந்தோணி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் மோகன் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுபோல், மாவட்டம் முழுவதும் மொத்தம் 40 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆட்டோ டிரைவர்கள் சங்க மாவட்ட செயலாளர் சோபனராஜ், நிர்வாகிகள் சக்திவேல், சகாய ஆன்றனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.