ஒன்பதாம் வகுப்பு மாணவன் வடிவமைத்த தானியங்கி கிருமி நாசினி கருவி
By: Nagaraj Fri, 09 Oct 2020 09:47:06 AM
9ம் வகுப்பு மாணவரின் சாதனை... ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர், தானியங்கி கிருமி நாசினி வழங்கும் கருவியை வடிவமைத்து, அதனை இ.எஸ்.ஐ.,மருத்துவமனைக்கு தானமாக வழங்கி அசத்தியுள்ளார்.
கோவை, காந்திபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவர். இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன், மகிழன் (14). தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். மகிழனுக்கு சிறுவயதில் இருந்தே, மின்னணு சாதனங்களை தயாரிப்பதில் அதிக ஈடுபாடு உண்டு.
மகனின் திறமையை உணர்ந்த சண்முகவேல், தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் கருவி உருவாக்குமாறு ஊக்குவித்துள்ளார். இது குறித்து மகிழன் கூறுகையில், ''கொரோனா பரவாமல் இருக்க கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தி வருகின்றனர். மருத்துவமனை போன்ற பொது இடங்களில் பலரும் வந்து செல்வதால், கிருமிநாசினி பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.
அதேசமயம் கிருமிநாசினி பாட்டில்களை ஒருவர் கைகளால் தொட்டு
பயன்படுத்தும்போது, மற்றவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதற்காக,
சமூகவலைதளங்களில் பார்த்து, அதில் இருக்கும் தொழில்நுட்பங்களை
கற்றுக்கொண்டு, தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் கருவியை வடிவமைத்தேன்.
இதில், மறுசுழற்சி செய்யும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சென்சார் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது,'' என்று தெரிவித்துள்ளார்.
இதற்கான
பொருட்கள் எங்கிருந்து கிடைத்தன என்ற கேள்விக்கு, ''இதற்கு தேவையான
பொருட்கள், கோவையில் உள்ள கடைகளிலேயே கிடைக்கின்றன. இந்த கருவி தயாரிக்க
வெறும் 400 ரூபாய் வரை மட்டுமே செலவானது,'' என்றார். மகிழன் தயாரித்த
தானியங்கி கருவி, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக
வைக்கப்பட்டுள்ளது. சிறுவனின் இந்த முயற்சிக்கு, இ.எஸ்.ஐ.,மருத்துவமனை டீன்
பாராட்டு தெரிவித்துள்ளார்.