வேலூர் மற்றும் புதுச்சேரியின் வெள்ள சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு
By: Monisha Mon, 07 Dec 2020 12:02:58 PM
நிவர் புயலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக உயிர் சேதம் மட்டுமின்றி பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கிறது. நிவர் புயல் மற்றும் மழை காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட மத்திய உள்துறை இணைச்செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்தனர்.
இந்த குழுவில் ஐதராபாத்தில் உள்ள மத்திய வேளாண்துறை எண்ணெய் வித்துகள் வளர்ச்சி இயக்குனர் மனோகரன், மத்திய சாலை போக்குவரத்துத்துறை மண்டல அதிகாரி ரணன் ஜெய்சிங், டெல்லியில் உள்ள மத்திய நிதித்துறை இயக்குனர் பர்தெண்டு குமார், மத்திய மின்சார குழும துணை இயக்குனர் ஓ.பி.சுமன், மத்திய ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் தர்மவீர் ஜா, மத்திய மீன்வள மேம்பாட்டு ஆணையர் பால்பாண்டியன், சென்னையில் உள்ள மத்திய நீர் ஆணைய கண்காணிப்பு இயக்குனர் ஜெ.ஹர்ஷா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மத்திய குழுவினர் நேற்று இரண்டு குழுக்களாக பிரிந்து நேற்று ஆய்வை நடத்தினர். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்து வருகின்றனர். பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன் தலைமையிலான மத்தியக்குழு ஆய்வு செய்து வருகிறது.
மேலும் புதுச்சேரியில் நிவர் புயல், வெள்ள சேதங்களை அசுதோஷ் தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர். ஆய்வுக்குப்பிறகு புதுச்சேரி தலைமை செயலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமியுடன் மத்திய குழு ஆலோசனை செய்கிறது.