கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை
By: Monisha Thu, 24 Dec 2020 1:59:59 PM
புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ளது. உலக அளவில் பிரசித்திப் பெற்ற இந்த பேராலயத்தில் ஏசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இன்று இரவு 11.00 மணி அளவில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடக்கிறது.
வழக்கமாக வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் விண்மீன் ஆலயத்தில் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா பரவலை தடுப்பதற்காக விண்மீன் ஆலயம் அருகில் உள்ள சேவியர் திடலில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு பந்தலில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இதில் 2 ஆயிரம் பேர் கலந்து கொள்ள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளதாகவும், அரசு அறிவுரையின்படி பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், இதற்காக பேராலயம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பேராலய அதிபர் பிரபாகர் கூறினார்.