Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தூத்துக்குடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் சுற்றுப்பயணம்

தூத்துக்குடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் சுற்றுப்பயணம்

By: Monisha Wed, 30 Dec 2020 12:40:50 PM

தூத்துக்குடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் சுற்றுப்பயணம்

அடுத்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் கட்சியினர் ஏற்கனவே தொடங்கி விட்டனர். தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை நாமக்கலில் நேற்று தொடங்கினார். பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்யும் அவர் வருகிற 3, 4-ம் தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

வருகிற 3-ம் தேதி காலை 8.00 மணிக்கு அவர் பிரச்சாரத்தை தொடங்குகிறார். முதலாவதாக கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டப்பொம்மன் மணிமண்டபத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து காலை 9.00 மணிக்கு கோவில்பட்டி தொகுதி வில்லிச்சேரியில் பருத்தி விவசாயிகளுடன் கலந்துரையாடல், 10.00 மணிக்கு கோவில்பட்டியில் பொதுக்கூட்டம், 11.15 மணிக்கு கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே சிறு வணிகர்களுடன் சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

மதியம் 12.15 மணிக்கு விளாத்திகுளம் தொகுதி எட்டயபுரத்தில் நெசவாளர்களுடன் கலந்துரையாடல், 1.30 மணிக்கு விளாத்திகுளத்தில் மிளகாய் விவசாயிகளுடன் கலந்துரையாடல், மாலை 4.30 மணிக்கு ஓட்டப்பிடாரம் தொகுதி புதியம்புத்தூரில் சிறு, குறு வணிகர்களுடன் சந்திப்பு, மாலை 5.15 மணிக்கு ஓட்டப்பிடாரத்தில் விவசாய தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

election,campaign,tour,honor,public meeting ,தேர்தல்,பிரச்சாரம்,சுற்றுப்பயணம்,மரியாதை,பொதுக்கூட்டம்

தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் பயணிப்பவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரவு 8.00 மணிக்கு தூய பனிமய மாதா பேராலயத்தில் வழிபாடு செய்கிறார். பின்னர் இரவு 8.45 மணிக்கு தூத்துக்குடி டி.எஸ்.எப். தங்கும் விடுதியில் கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், இரவு 9.45 மணிக்கு டாக்டர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

4-ம் தேதி மாலை 4.00 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதி கருங்குளத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல், மாலை 4.45 மணிக்கு வைகுண்டநாதர் பெருமாள் கோவிலில் தரிசனம் மற்றும் ஆலய வளாகத்தில் உள்ளவர்களுடன் கலந்துரையாடல், மாலை 6.00 மணிக்கு அடைக்கலாபுரத்தில் விவசாயிகள், கருப்பட்டி-வெல்லம் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

மாலை 6.45 மணிக்கு திருச்செந்தூர் தொகுதி வீரபாண்டியன்பட்டினத்தில் மீனவ சமுதாய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு தூத்துக்குடி டி.எஸ்.எப். தங்கும் விடுதியில் பத்திரிகையாளர் சந்திப்பு, இரவு 9.15 மணிக்கு உள்ளூர் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அவர் இரண்டு நாட்களிலும் மொத்தம் 18 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags :
|
|