இடநெருக்கடி என்று கூறி கொரோனா நோயாளிகளை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு
By: Nagaraj Sat, 04 July 2020 1:12:16 PM
கோவையில் இடநெருக்கடியால் கொரோனா நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா சிகிச்சை மையமான கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், இடநெருக்கடி நிலவுவதாக கூறப்படுகிறது.
கோவை மாவட்டம் மட்டுமல்லாது, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்கள், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். நோயாளிகளுக்கு, ஆரம்பத்தில், 300 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டன. நோயாளிகள் அதிகளவில் அனுமதிக்கப்படுவதன் காரணமாக, கூடுதலாக 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், போத்தனுார் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அழைத்து
வராமல், நேராக பொள்ளாச்சிக்கு அழைத்து சென்று, அரசு பள்ளியில் தங்க
வைத்துள்ளனர்.
இதுகுறித்து, கொரோனா பாதித்த நபர் கூறுகையில்,''எந்த
டாக்டரும் வந்து பார்க்கவில்லை. தண்ணீர் வசதியும் இல்லை. என்னுடன்
இன்னொருவரும் இருக்கிறார். சாப்பாடு கூட, வெளியில் இருந்துதான் வாங்கி
சாப்பிட்டோம்,'' என்றார். பொள்ளாச்சி பகுதிக்கான சிறப்பு அலுவலர்
கூறுகையில், 'இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் அதிக நோயாளிகள் வந்ததால், புதிய
நோயாளியை அனுமதிக்கப்பட முடியாத சூழல் ஏற்பட்டது. தற்காலிகமாக
பொள்ளாச்சிக்கு அனுப்பினர். மீண்டும் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு
மாற்றிவிடுவோம்,'' என்றார்.
கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன்
நிர்மலா கூறுகையில்,''இங்கு, 500 படுக்கை வசதிகள் தயார் நிலையில்
இருக்கின்றன. அதில், 320 படுக்கை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இட
பற்றாக்குறை எதுவும் இல்லை,'' என்றார்.