நெல்லை மாவட்டத்தில் ஒரேநாளில் 120 பேருக்கு கொரோனா உறுதி
By: Monisha Sat, 11 July 2020 1:21:23 PM
நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 1,551 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரேநாளில் 120 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 3 ஆயிரத்து 680 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,829 பேர் பலியாகியுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 74,969 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சென்னையை போன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் கொரோனா பரவி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் நேற்றய நிலவரப்படி 1,551 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 765 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 777 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 120 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,671-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாநகர பகுதியில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.