இங்கிலாந்திலிருந்து தமிழகம் வந்த 13 பயணிகளுக்கு கொரோனா
By: Monisha Tue, 29 Dec 2020 10:30:26 AM
தமிழகம் முழுவதும் உள்ள கொரோனா பாதிப்பு நிலவரம்,மற்றும் சிகிச்சை விவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 62 ஆயிரத்து 884 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 624 ஆண்கள், 381 பெண்கள் என மொத்தம் 1,005 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில், 12 வயதுக்குட்பட்ட 57 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 207 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 36 லட்சத்து 85 ஆயிரத்து 464 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 8 லட்சத்து 15 ஆயிரத்து 175 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து நாட்டிலிருந்து தமிழகம் வந்த 13 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பயணிகளுடன் தொடர்பில் இருந்த 93 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஏற்கனவே 12 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், நேற்று கூடுதலாக 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன்மூலம் இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகளுடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 77 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் ஒருவரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.
இங்கிலாந்திலிருந்து வந்த 2,349 பயணிகளில், 1,549 பயணிகள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 1,432 பேருக்கு பாதிப்பு இல்லை. 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 104 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. மேலும் இங்கிலாந்திலிருந்து தமிழகம் வந்த 800 பயணிகள் குறித்த விவரம் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 6 பேரும், தனியார் மருத்துவமனையில் 5 பேரும் என 11 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுவரையில் தமிழகத்தில் 12,080 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து 1,074 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் தமிழகத்தில் 7 லட்சத்து 94 ஆயிரத்து 228 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் 8 ஆயிரத்து 867 பேர் உள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.