மகசின் சிறைச்சாலையில் 48 தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொரோனா
By: Nagaraj Sat, 26 Dec 2020 8:58:49 PM
கொழும்பு, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், வைத்தியர் சிவரூபன், இரகுபதி சர்மா உட்பட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொரோனா தொற்று உட்பட்ட நோய்த் தாக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரின் விபரங்களை குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“நாட்டில் கொரோனா தொற்று பல கொத்தணிகளாக உருவெடுத்து மிக வேகமாகப் பரவி
பாதிப்புக்களை ஏற்படுத்திவருகிறது. அந்தவகையில், சிறைச்சாலை கொரோனா கொத்தணி
மூலம் இதுவரை மூவாயிரத்து 111 கைதிகளுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு
அவர்கள் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். ஐந்து கைதிகள் வைரஸ் தொற்றினால்
உயிரிழந்துள்ளனர்.
தமிழ் அரசியற் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள
கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் 810 கைதிகள் நோய்த் தொற்றுக்குள்ளாகி
இருக்கிறார்கள். ஏனைய சிறைச்சாலைகளுடன் ஒப்பிடுகையில் மகசின்
சிறைச்சாலையிலேயே தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்படுபவர்களின் தொகை
அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்நிலையில், மகசீன் சிறைச்சாலையில்
தடுத்துவைக்கப்பட்டிருந்த 48 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொரோனா தொற்று
ஏற்பட்டிருந்தது. இவர்களில், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களால்
பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அடங்கலாக வைத்தியர் சிவரூபன், இந்து மதகுருவான
இரகுபதி சர்மா உட்பட்ட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.