நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,500-ஆக உயர்வு
By: Monisha Fri, 10 July 2020 11:09:14 AM
நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 1,409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 91 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியது. ஆனால் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,765 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 161 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 73,728 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது சென்னை மட்டுமல்லாது தென் மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 1,409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 735 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 665 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 91 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500-ஆக உயர்ந்துள்ளது.