கோயம்புத்தூரில் 10 போலீசார் உட்பட 227 பேருக்கு கொரோனா
By: Nagaraj Mon, 03 Aug 2020 7:59:41 PM
கோவையில் காவலர்கள் 10 பேர் உள்பட 227 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஒருவருக்கு அண்மையில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் மற்ற காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் ஒரு சிறப்பு காவல் ஆய்வாளர், 2 முதல்நிலை பெண் காவலர்கள், 4 முதல்நிலை ஆண் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் சேர்த்து மொத்தம் 10 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அன்னூர் காவல் நிலையம் இரண்டாவது முறையாக தற்காலிகமாக அடைக்கப்பட்டது.
இது தவிர அன்னூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த 52 வயது ஆண், 11 வயது
சிறுவன், 9 வயது சிறுமி, கோவில்பாளையம் காவலர் குடியிருப்பை சேர்ந்த 37
வயது ஆண், காந்திபுரம் சிறை மைதான காவலர் குடியிருப்பை சேர்ந்த 33 வயது
பெண், கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் 28 வயது
இளைஞர் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களைத்
தவிர பீளமேட்டில் 8 பேருக்கும், சித்தாபுதூரில் 7 பேருக்கும், அன்னூரில் 7
பேருக்கும், டவுன்ஹால், உக்கடம், குறிச்சியில் தலா 5 பேருக்கும், கணபதி,
மேட்டுப்பாளையத்தில் தலா 4 பேர் உள்பட 227 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 458 ஆக உயர்ந்துள்ளது.