- வீடு›
- செய்திகள்›
- ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிக்கு கொரோனா; தனிமைப்படுத்திக் கொண்ட மலேசிய பிரதமர்
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிக்கு கொரோனா; தனிமைப்படுத்திக் கொண்ட மலேசிய பிரதமர்
By: Nagaraj Sat, 23 May 2020 11:16:50 AM
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு இருந்தததால் 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் மலேசிய பிரதமர்.
மலேசியாவில் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த கூட்டத்தில் பங்கேற்ற மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதுவரை, 7,137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 115 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த 20ம் தேதி அமைச்சரவை கூட்டத்திற்கு முந்தைய ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. இதில் பிரதமர் முகைதீன் யாசின் தலைமை வகித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து நேற்று பிரதமர் முகைதீனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது.
தொடர்ந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பிறப்பித்த சட்டத்தின்படி, பிரதமர், அவரது வீட்டிலேயே 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
இது வெள்ளிக்கிழமை காலை (நேற்று) முதல் துவங்குகிறது. பிரதமர் அலுவலகத்தில் நடக்கும் அனைத்து கூட்டங்களும் சமூக இடைவெளியை பின்பற்றியே நடத்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.