சாத்தான்குளம் வழக்கில் கைதான 5 பேருக்கும் 30ம் தேதி வரை நீதிமன்றக் காவல்
By: Nagaraj Thu, 16 July 2020 6:45:57 PM
30ம் தேதி வரை நீதிமன்ற காவல்... சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களுக்கும் வரும் 30ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கை மீறி கடை வைத்ததாகக் கைது செய்யப்பட்ட வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது, போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. இதில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாரை காவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
சம்பவம் நடந்த சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 5 பேரும், சம்பவத்தன்று நடந்ததை நடித்துக் காட்டினர்.
கடந்த
2 நாட்களாக சிபிஐ விசாரணை வளையத்திற்குள் இருக்கும் 5 காவலர்களிடமும்
தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்றுடன் சிபிஐ
காவல் முடிவடைந்த நிலையில், கைது செய்யப்பட்ட காவலர்கள் மதுரை தலைமை
குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இன்ஸ்பெக்டர்
ஸ்ரீதர் உள்பட 5 பேருக்கும் ஜுலை 30ம் தேதி வரை நீதிமன்றக் காவலை விதித்து
நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் மதுரை சிறைக்கு அழைத்துச்
செல்லப்பட்டனர். காவலர் முத்துராஜுக்கு மட்டும் மேலும் 1 நாள் சிபிஐ காவல்
விதித்து நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, மற்ற 5
காவலர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ள சிபிஐ, இதற்காக
நீதிமன்றத்தில் விரைவில் மனு தாக்கல் செய்ய உள்ளது.