Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புயல், மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் வீடுகள், பயிர்கள் சேதம்

புயல், மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் வீடுகள், பயிர்கள் சேதம்

By: Monisha Fri, 27 Nov 2020 4:20:30 PM

புயல், மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் வீடுகள், பயிர்கள் சேதம்

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை கரையை கடந்தது. அப்போது பலத்த காற்று வீசியது. தஞ்சை மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக நேற்று முன்தினம் அதிகாலை முதலே மழை பெய்யத் தொடங்கியது. நேற்று அதிகாலை வரை இந்த மழை நீடித்தது. அவ்வப்போது பலத்த மழையும் பெய்தது. நேற்று காலை முதல் மழையின்றி லேசான வெயில் அடித்தது. அத்துடன் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. நிவர் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் அதிகாலை 1.00 மணிக்குப் பிறகு பலத்த காற்றும் வீசியது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 38 மி.மீ. மழை பதிவானது. இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. புயல் காரணமாக ஏற்கனவே தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதற்காக தஞ்சை மாவட்டத்தில் 251 இடங்களில் நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. புயல் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நேற்று காலை 10 மணிக்குப் பிறகு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

storm,rain,houses,crops,damage ,புயல்,மழை,வீடுகள்,பயிர்கள்,சேதம்

புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் 34 கூரை வீடுகள் பகுதியாகவும், ஒரு கூரை வீடு முழுமையாகவும், ஒரு ஓட்டு வீடு பகுதியாகவும் என மொத்தம் 36 வீடுகள் சேதம் அடைந்தன. மாவட்டத்தில் 7 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவை உடனடியாக வெட்டி எடுக்கப்பட்டு அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன.

இந்த மழையினால் மாவட்டத்தில் 1 மாடு, 2 ஆடுகள் உயிரிழந்தன. மாவட்டத்தில் 20 இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதையடுத்து சாய்ந்த இடங்களில் மாற்று மின்கம்பங்களைக்கொண்டு சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்றது. மழையினால் கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதிகளில் விளைந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. இளம் நடவுப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி காணப்பட்டது. ஆனால் நேற்று மழை இல்லாததால் வெள்ளநீர் வடியத்தொடங்கியது.

Tags :
|
|
|
|