சிறுவன் விழுங்கிய ஊசியை அகற்றிய மருத்துவர்கள்
By: Nagaraj Fri, 26 June 2020 8:35:46 PM
சிறுவன் விழுங்கிய ஊசியை அகற்றிய மருத்துவர்கள்... வவுனியாவிலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்றுவரும் எட்டு வயதான சிறுவனொருவன் தவறுதலாக விழுங்கிய ஊசி சுமார் 25 நிமிட சிகிச்சையின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை வவுனியாவில் தனது வீட்டில் வைத்து குறித்த சிறுவன் 3 இஞ்ச் நீளமான ஊசி ஒன்றினை வைத்து விளையாடி கொண்டிருந்துள்ளான். இதன்போது எதிர்பாராத விதமாக ஊசியை விழுங்கியுள்ளான். இதையடுத்து சிறுவனை உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் கதிரியக்கப்படம் எடுக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பின்னர் அந்த சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம்
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அநுராதபுரம் மருத்துவர்கள்
விரைந்து செயற்பட்டதன் காரணமாக சுமார் 25 நிமிட சிகிச்சைக்கு பின்னர் ஊசி
வெளியேற்றப்பட்டுள்ளது.
இந்த வெற்றிகரமான நடவடிக்கையினால் குறித்த
சிறுவன் ஆபத்து நிலையை கடந்து விட்டதாகவும் தெரியவருகிறது. குறித்த ஊசி
வாய்ப்பகுதி களச்சுவரில் குத்திச் சென்று நெஞ்சறைக்கூடு பகுதிகளிலுள்ள
இதயம், நுரையீரல் என்பவற்றை துளைப்பதற்கான அறிகுறிகள் கதிரியக்க படத்தில்
தெரிந்துள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.