கொரோனா பாதித்த வாலிபருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்
By: Nagaraj Wed, 26 Aug 2020 10:24:24 AM
கொரோனா பாதித்த வாலிபருக்கு கோவை அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அந்த இளைஞர் தற்போது நலமாக உள்ளார்.
திருப்பூர் மாவட்டம், கருப்பகவுண்டன் புதுாரில் வடமாநிலத்தை சேர்ந்த விக்ரம் குமார் (20) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் தினங்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கினார். வயிற்றினுள் குடலில் துளை ஏற்பட்டது.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் குடலோடு குடல் இணைக்கப்பட்டே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அறுவை சிகிச்சை செய்த இடத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மேற்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கோவை அரசு மருத்துவமனை டீன் (பொ) காளிதாஸ் ஆலோசனையின் பேரில், அறுவை
சிகிச்சை டாக்டர்கள் வெங்கடேசன், உதவி டாக்டர்கள் முருகதாசன், மயக்கவியல்
துறை தலைமை மருத்துவர் நர்மதா யாங்ஷி உள்ளிட்டோர் அடங்கிய குழு, அறுவை
சிகிச்சை மேற்கொண்டு இளைஞரின் உயிரை காப்பாற்றினர்.
முன்னதாக
அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருந்தது. சிகிச்சைக்குபின்,
வெளியான பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது தெரியவந்தது. எனினும்,
டாக்டர்கள் முழு பாதுகாப்புடன் சிகிச்சை மேற்கொண்டனர். மேலும், சிகிச்சை
அளிக்கப்பட்ட இடமும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
சிகிச்சைக்கு
பின், இளைஞர் நலமாக உள்ளதாக டீன் காளிதாஸ் தெரிவித்தார். கொரோனா
நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களை அனைவரும் பாராட்டினர்.