டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும்; அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
By: Monisha Thu, 09 July 2020 10:37:04 AM
அரசு பள்ளிகளில் வரும் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
உலகம் முழுவது கொரோனா வைரஸ் நோய் தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதன் காரணமாக அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு எதிராக போராடி கொண்டு இருக்கின்றன. அனைத்து நாடுகளிலும் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவது சில நாடுகளில் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் பள்ளிகள் செயல்படவில்லை. தமிழகத்திலும் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:- தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது, ஏனென்றால் ஆன்லைன் கல்வி கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு சென்று சேர்வது சற்று கடினம். எனவே, அனைத்து வீடுகளிலும் டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும்.
பிளஸ்-2வில் எஞ்சிய ஒரு தேர்வை எழுதாத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது. 12-ம் வகுப்பில் 718 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். விண்ணப்பிக்காத 34,812 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் எழுதலாம். இவ்வாறு அவர் கூறினார்.