செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் மீண்டும் திறக்கப்பட்டது
By: Monisha Thu, 03 Dec 2020 1:54:30 PM
சென்னையில் தொடர்ந்து மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்தது. தன காரணமாக இன்று பிற்பகல் 12.00 மணிக்கு ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
அதன்படி சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் மீண்டும் இன்று திறக்கப்பட்டது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 22.15 அடியாக இருக்கிறது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,000 கனஅடியாக உயர்ந்ததால் முதல்கட்டமாக 1,000 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நிவர் புயலின்போது செம்பரம்பாக்கம் ஏரியில் சில நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பின்னர் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவலூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.