நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை
By: Nagaraj Fri, 02 Oct 2020 2:50:23 PM
கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை... தஞ்சை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல், மழையில் நனைந்து வீணாவதால் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கொல்லாங்கரையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், அதன் வாசலிலேயே விவசாயிகள் குவித்து வைத்துள்ள 5 ஆயிரம் மூட்டை நெல்மணிகள் 4 நாட்களாக பெய்த கனமழையால், நனைந்து முளைத்துள்ளன.
மதுரை மாவட்டம் கள்புளிச்சான்பட்டியில் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தின் முன் விவசாயிகள் மூட்டைகளிலும், குவியலாகவும் வைத்துள்ள நெல் மழையில் நனைந்து முளைத்து வீணாகி வருகிறது. அதிகாரிகளோ தங்கள் கொள்முதல் இலக்கு முடிந்துவிட்டதால் நிலையத்தை மூடியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செம்பூரில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல்
செய்யப்பட்ட நெல்லை திறந்தவெளியில் மூட்டைகளில் வைத்து தார்ப்பாய் போர்த்தி
அடுக்கி வைத்திருந்தனர். இந்நிலையில் மழையின் காரணமாக தார்பாய்கள்
காற்றில் கிழிந்து, நெல் மூட்டைக்குள் தண்ணீர் புகுந்தில் நெல் மணிகள்
மீண்டும் முளைத்து வீணாகின்றன.
அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள்
வீணாகும் நிலை ஒருபக்கம் இருக்க அறுவடைக்கு தயாரான நெல்பயிர் மழையால்
சேதமாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 550 ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக
இருந்த குறுவைப் பயிர் தொடர் மழையால் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி
சேதம் அடைந்துள்ளதால், இழப்பீடு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.