நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல்
By: Nagaraj Tue, 27 Oct 2020 9:51:07 PM
தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது. மேலும் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளதாவது:
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
அதே போல காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிதமான
மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம்
மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான
மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறினார்.
மேலும், தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.