பிரான்சிஸ் முதல் முறையாக முக கவசம் அணிந்து வந்த போப் ஆண்டவர்
By: Karunakaran Thu, 10 Sept 2020 09:30:05 AM
கொரோனா வைரஸ் காரணமாக வாட்டிகன் நகரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் சுமார் 6 மாதங்களாக கூட்டு பிரார்த்தனையை தவிர்த்து தேவாலயத்தில் தனியாக பிரார்த்தனை நடத்தி வந்தார். இந்நிலையில் வாட்டிகன் நகரில் கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது.
தற்போது 6 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக கடந்த வாரம் பொதுமக்களுடன் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூட்டு பிரார்த்தனை நடத்தினார். நேற்று மக்களுடன் சேர்ந்து கூட்டு பிரார்த்தனை நடத்த வந்தபோது போப் ஆண்டவர் பிரான்சிஸ் முதல் முறையாக முக கவசம் அணிந்து வந்தார். மேலும் அவர் பிரார்த்தனையை தொடங்குவதற்கு முன் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டார்.
கொரோனா தொற்று காலத்தில் மக்கள் தங்களின் ஆரோக்கியத்தை போல் மற்றவர்களின் ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டியது அவசியம், அதற்கு முக கவசம், கிருமிநாசினி போன்றவற்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என போப் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு தனிநபரின் நன்மை ஒரு பொதுவான நன்மை என்பதையும் பொதுவான நன்மை ஒவ்வொரு தனிநபரின் நன்மை என்பதையும் கொரோனா வைரஸ் நமக்கு காட்டுகிறது. ஆரோக்கியம் ஒரு தனிப்பட்ட நன்மை என்பதோடு மட்டுமல்லாமல் ஒரு பொதுவான நன்மையாகும். ஆரோக்கியமான சமூகம் என்பது அனைவரின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்வது என்று கூறினார்.