கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதாக கூறி பண வசூல் செய்து மோசடி; 2 இளைஞர்கள் கைது
By: Nagaraj Thu, 30 July 2020 9:22:05 PM
பண மோசடி செய்த 2 பேர் கைது... ஆந்திராவில் கொரோனாவை காரணம் காட்டி சமூகவலைதளங்களில் உருக்கமாக வீடியோ வெளியிட்டு 3 கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பழைய ஹைதராபாத் நகரை சேர்ந்த இளைஞர்கள் சிலர் HYC என்ற அமைப்பை தொடங்கி, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகளுக்கு தாங்கள் நேரடியாக சென்று உதவி செய்வதாக இளைஞர் ஒருவர் பேசியிருந்தார். மேலும், இளைஞரின் பின்னால், பெண் ஒருவர் கொரோனா பாதித்து தீவிர சிகிச்சை எடுத்து வருவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இதனை நம்பிய பலர், வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கிக்
கணக்குக்கு நன்கொடை செலுத்தியுள்ளனர். தொழிலதிபர் ஒருவர் 45 லட்சம் ரூபாயை
நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இது போன்று 15 நாட்களில் சுமார் 3 கோடி
ரூபாய் வரை பணம் வசூல் செய்த அந்த கும்பல் தங்களின் நன்கொடை
பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைந்ததா என விசாரிக்க சென்றவர்களையும்
தாக்கியதாக சொல்லப்படுகின்றது.
இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட இளைஞர்கள் சல்மான்கான், அகமது மொய்தீன் ரஷித்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.