அலட்சியமாக இருக்கும் எவரையும் கொரோனா வைரஸ் விடாது; கவர்னர் கிரண்பேடி
By: Monisha Tue, 11 Aug 2020 1:21:23 PM
கொரோனா வைரஸ் பரவல் குறித்து சமூக வலைதளத்தில் புதுவை கவர்னர் கிரண்பேடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிமுறைகள் மீறப்படுவதை அனைத்து வகையான ஊடகங்களும், அதிகாரிகளும் ஆவணப்படுத்த வேண்டும். சிலர் விதிமுறைகளை மீறி நடப்பதை பார்த்து மக்களும் அதை கடைபிடிக்கின்றனர்.
போலீசாரும் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் எல்லா விஷயங்களிலும் மிகவும் ஆபத்தானது. அலட்சியமாக இருக்கும் எவரையும் அது விடாது.
இதில் சோகம் என்னவென்றால் அலட்சியமாக இருப்பவர்களால் அது மற்றவர்களுக்கும் பரவுகிறது. குடும்பங்களில் சுகாதாரமற்ற பழக்கவழக்கங்களால்கூட இது பரவுகிறது.
கூட்டங்களுக்கு வர அழைப்பு விடுக்கும்போது மக்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனெனில் அந்த கூட்டங்கள் மூலமாகவும் வைரஸ் பரவும். மெல்லிய முகக்கவசங்கள் அவர்களை முழுமையாக பாதுகாக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.