தொடர் மழையால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயர்வு
By: Monisha Thu, 10 Dec 2020 11:25:24 AM
சென்னையில் தொடர் மழை காரணமாக குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகள் அனைத்தும் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன. இதன் காரணமாக வருகிற கோடைக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் இருக்க வாய்ப்பில்லை என்ற செய்தியை அவ்வப்போது சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு நல்ல செய்தியையும் சென்னை குடிநீர் வாரியம் அறிவித்திருக்கிறது. அதாவது, சென்னையில் ஒரே மாதத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர், தண்டையார்ப்பேட்டை, ராயபுரம், ஆலந்தூர், வளசரவாக்கம், கோடம்பாக்கம், பெருங்குடி, திரு.வி.க.நகர், மணலி, மாதவரம், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, அடையார், சோழிங்கநல்லூர் ஆகிய 15 மண்டலங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக உயர்ந்திருப்பதை புள்ளி விவரங்களுடன் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்திருக்கிறது.
புள்ளி விவரங்களின்படி, கடந்த அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக திரு.வி.க.நகர் மண்டலத்தில் 2.66 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருப்பது புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. குறைந்தபட்சமாக சோழிங்கநல்லூரில் 0.54 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
ஏற்கனவே சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று கூறி வரும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், தற்போது சென்னையின் 15 மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருப்பதால் வீடுகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் தண்ணீருக்கும் தட்டுப்பாடு இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கின்றனர். இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.