ஹத்ராஸ் இளம்பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை - உ.பி. ஏ.டி.ஜி.பி பிரசாந்த் குமார்
By: Karunakaran Fri, 02 Oct 2020 4:19:40 PM
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த 19வயது பெண் கடந்த மாதம் 14-ந் தேதி அங்குள்ள நிலத்தில் புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது அக்கிராமத்தை சேர்ந்த உயர் வகுப்பை சேர்ந்த 4 வாலிபர்களால் அவர் தூக்கி செல்லப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டார். இதை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக, நாக்கையும் அறுத்ததாக தெரிகிறது.
ரத்த வெள்ளத்தில் சாலையோரம் கிடந்த அந்த பெண்ணை ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் கழுத்து, முதுகுப் பகுதிகளில் எலும்பு முறிவுகளுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், தீவிர சிகிச்சை பலனளிக்காமல் செவ்வாய்க்கிழமை பலியானார்.
இந்நிலையில் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் உ.பி. காவல்துறை தங்களுக்கு உதவி எதுவும் செய்யவில்லை, தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர். நேற்று அதிகாலை அப்பெண்ணின் உடல் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு உ.பி. காவல் துறையினரால் எரியூட்டப்பட்டார். குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல் காவல்துறை அவரது உடலை எரியூட்டியதாக குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உ.பி. ஏ.டி.ஜி.பி பிரசாந்த் குமார் கூறுகையில், கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதிக்கப்பட்ட இளம்பெண் இறந்துவிட்டார் என்று பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. எஃப்எஸ்எல் அறிக்கை மாதிரிகளில் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. சாதி அடிப்படையிலான பதற்றத்தைத் தூண்டுவதற்காக சில விஷமிகள் இந்த விஷயத்தை திசை திருப்புகிறார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது. அத்தகைய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.