உள்கட்சி தேர்தலை நடத்தாவிட்டால் எதிர் கட்சி வரிசைதான்; குலாம் நபி ஆசாத் எச்சரிக்கை
By: Nagaraj Sat, 29 Aug 2020 08:09:07 AM
எதிர் கட்சி வரிசைதான்... காங்கிரசில் உள்கட்சி தேர்தல் நடத்தாவிட்டால் 50 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சி வரிசையில்தான் அமரவேண்டியிருக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சாடியுள்ளார். காங்கிரசுக்கு முழுநேர தலைவர் தேவை என மற்றொரு மூத்த தலைவரான கபில் சிபல் காட்டமாகக் கூறியுள்ளார்.
காங்கிரசுக்கு முழுநேர மற்றும் வெளிப்படையான தலைமை அவசியம் என வலியுறுத்தி, கடிதம் எழுதிய அக்கட்சியின் மூத்த தலைவர்கள், சோனியா-ராகுல் விசுவாசிகளால் குறிவைக்கப்பட்டதாகவும், பொறுப்புகள் பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கட்சியில் ஒரு சதவீத ஆதரவு இல்லாதவர்கூட நியமன தலைவராக வந்துவிடலாம் என கூறியுள்ள குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் காரியக் கமிட்டி, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், பகுதி தலைவர்கள் உள்ளிட்ட கட்சிப் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
தலைமைக்கு நெருக்கமானவர்கள் பரிந்துரையின்பேரில் மாநில காங்கிரஸ் கமிட்டி
தலைவர்கள் நியமிக்கப்படுவதாகவும், அவர்கள் டெல்லிக்கு வந்து போகும்
நபர்களாக மட்டும் உள்ளனர் என்றும் குலாம் நபி ஆசாத் சாடியுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட
அமைப்புகள் வழிநடத்தினால் கட்சி உருப்படும், இல்லை எனில் அடுத்த 50
ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சி வரிசையில்தான் இருக்க வேண்டும் என குலாம்நபி
ஆசாத் கூறியுள்ளார்.
இதேபோல, வரலாறு காணாத சரிவில் உள்ள காங்கிரஸ்
கட்சிக்கு முழுநேர தலைமை தேவை என கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார். சோனியா
காந்தி குடும்பத்தினர் உள்ளிட்ட யாரையும் சிறுமைப்படுத்தும் நோக்கத்துடன்
கடிதம் எழுதவில்லை என்றும், கட்சிக்கு புத்துயிரூட்டுவதே தங்கள் நோக்கம்
என்றும் அவர் கூறியுள்ளார்.