லடாக் மோதல் தொடர்பாக இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இன்று காலை பேச்சுவார்த்தை
By: Nagaraj Tue, 30 June 2020 09:24:39 AM
இன்று மீண்டும் பேச்சுவார்த்தை... லடாக் மோதல் தொடர்பாக இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால் எல்லையில் அமைதி திரும்புமா என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
லடாக்கின் கிழக்கே பங்கோங் சோ ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் கடந்த மாத தொடக்கத்தில் ஊடுருவியது. இதனால் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வந்த நிலையில், கடந்த 15-ந்தேதி மீண்டும் இருதரப்பும் வன்முறையில் ஈடுபட்டன.
இந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் 35 பேரும் பலியானார்கள். இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இரு தரப்பிலும் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டன.
இரு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில்
இருதரப்பும் தொடர் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு உள்ளன. கடந்த 16-ந் தேதி
முதல் இருநாட்டு ராணுவத்தின் கீழ்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை
நடத்தினர்.
பின்னர் இருநாட்டு ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல்
மட்டத்தில் கடந்த 22-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு
தரப்புக்கும் இடையே ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. எல்லையில்
சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை திரும்ப பெறுவது
எனவும் முடிவு செய்யப்பட்டது.
இருப்பினும் கல்வான் பள்ளத்தாக்கு
பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவி, இந்திய பகுதிக்குள் முகாமிட்டு
உள்ளதை செயற்கைக் கோள் படங்கள் உறுதி செய்தன. இந்நிலையில் லடாக் மோதல்
தொடர்பாக லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
நடக்கிறது. உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் உள்ள சுசுல்
செக்டாரின் இந்திய பகுதிக்குள் காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த
பேச்சுவார்த்தையில், எல்லையில் பதற்றத்தை தணிப்பது குறித்தும், படைகள்
விலக்கலுக்கான வழிமுறைகளை இறுதி செய்வது குறித்தும் இருதரப்பும் ஆலோசனை
நடத்துகின்றன.
இந்த பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பில் 14-வது
படைப்பிரிவு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான
குழுவினரும், சீன தரப்பில் திபெத் ராணுவ படைப்பிரிவு கமாண்டர் தலைமையிலான
குழுவும் பங்கேற்கின்றனர். இருநாட்டு லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில்
நடைபெறும் 3-வது பேச்சுவார்த்தை இதுவாகும். முன்னதாக கடந்த 6-ந் தேதி
முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது.