கனடா தூதருக்கு சம்மன் அனுப்பியது இந்திய வெளியுறவுத்துறை
By: Nagaraj Sat, 05 Dec 2020 10:59:46 AM
கனடா தூதருக்கு சம்மன்... விவசாயிகள் போராட்டம் குறித்த கனடா பிரதமரின் கருத்தைக் கண்டித்து இந்திய வெளியுறவுத் துறை கனடா தூதருக்கு சம்மன் அனுப்பியது.
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் இன்றோடு 9-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இந்த சூழலில், அண்மையில், டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து தெரிவித்து இருந்தார்.
ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், “இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் பற்றி செய்திகள் வெளிவருகின்றன. நிலமை கவலை அளிக்கும் அம்சமாக உள்ளது. உரிமைகளைப் பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும்" எனக் கூறியிருந்தார்.
டெல்லி விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த முதல் உலகத்
தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ ஆவார். கனடா பிரதமரின் கருத்துக்கு இந்திய
வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. கனடா பிரதமரின்
கருத்தைக் கண்டித்து இந்திய வெளியுறவுத்துறை சார்பில், கனடா நாட்டுத்
தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
தொடர்ந்து கனடா தூதர் நதிர்
படேலை நேரில் அழைத்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும்,
இத்தகைய கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவித்தால் இருநாட்டு உறவில் பாதிப்பு
ஏற்படும் எனவும் வெளியுறவுத்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.