வந்தே பாரத் திட்டம் மூலம் தாயகம் திரும்பிய இந்தியர்கள்
By: Karunakaran Mon, 08 June 2020 09:30:45 AM
உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் கல்வி மற்றும் வேலைக்காக சென்ற இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்தனர்.
இவ்வாறு பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது, வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சுமார் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மூன்றாவது கட்டத்தில் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஏதுவாக கூடுதலாக விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, 311-க்கும் அதிகமான விமானங்கள் இணைக்கப்படவுள்ளன.
மேலும் இதுகுறித்து விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டர் பக்கத்தில், இதுவரை 640 தனிப்பட்ட விமான சேவைகளுக்கு அனுமதி வழங்கியதன் மூலம், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.