Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி தமிழ் மக்கள்; எம்.பி., சி.வி. விக்னேஸ்வரன் தகவல்

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி தமிழ் மக்கள்; எம்.பி., சி.வி. விக்னேஸ்வரன் தகவல்

By: Nagaraj Tue, 01 Sept 2020 4:09:03 PM

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி தமிழ் மக்கள்; எம்.பி., சி.வி. விக்னேஸ்வரன் தகவல்

அப்பாவி தமிழ் மக்கள்... முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தி போராட தூண்டப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த நேர்காணலில், விடுதலைப் புலிகள் அமைப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. ஆயுதம் ஏந்துவதற்கு இலங்கையின் ஆட்சியாளர்களே காரணம். இதற்கு விடுதலைப் புலிகளை குறை சொல்வதில் பயனில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

vigneswaran,interview,innocent tamil people,testimonies ,விக்னேஸ்வரன், நேர்காணல், அப்பாவி தமிழ் மக்கள், சாட்சியங்கள்

இதன்போது, உலக நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்கையில் நீங்கள் இதனை ஏன் பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ளவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சி.வி.விக்னேஸ்வரன், அரசாங்கம் தான் செய்யும் தவறுகளை மூடி மறைத்து, அது குறித்து கேள்வி எழுப்புகின்றவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் இராணுவத்தினர், விடுதலைப்புலிகள் உறுப்பினர்களைத் தவிர்த்து அப்பாவி மக்களை கொலை செய்தனரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் என கூறிய சி.வி.விக்னேஸ்வரன், பொதுமக்களை கொலை செய்ய வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இருக்கவில்லை. இராணுவமே அவர்களை கொலை செய்தது எனவும் கூறியுள்ளார்.

மேலும் முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதிகள் மயானத்தில் ஏன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சி.வி.விக்னேஸ்வரன், அந்த இடத்திற்குச் சென்று மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை உள்ளதாகவும் அதனாலேயே தாம் அங்கு சென்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மொழியை இலங்கையின் முதன் மொழியாக கூறியமைக்கு ஆதாரம் உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, இலங்கை பண்டையகாலம் முதல் தமிழ் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்துவதற்கு தன்னிடம் சாட்சியங்கள் இருக்கின்றன என்றும் சி.வி.விக்னேஸ்வரன் இந்த நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags :