மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சிறை
By: Nagaraj Sun, 18 Oct 2020 10:06:07 PM
மீனவர் கைது... புதுவையில் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீனவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
புதுவையை அடுத்த வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் கலைவாணன் (27) மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியிடம் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதை தவறாக புரிந்து கொண்ட கலைவாணன் ஒருகட்டத்தில் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவர் ராஜேந்திரனிடம் புகார் செய்தனர். விசாரணையில் மாணவிக்கு கலைவாணன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் தலைமையிலான
போலீசார் கலைவாணன் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுபற்றி அறிந்ததும் கலைவாணன் தலைமறைவானார். போலீசார் தேடி வந்தநிலையில்
நேற்று அவரை கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து கலைவாணன் கொரோனா
பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனை முடிவு வந்தவுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்
அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.