Advertisement

தர்மபுரியில் 43 அம்மா மினி கிளினிக்குகள் துவக்கம்

By: Monisha Thu, 17 Dec 2020 2:03:36 PM

தர்மபுரியில் 43 அம்மா மினி கிளினிக்குகள் துவக்கம்

காரிமங்கலம் ஒன்றியம் பொம்மஅள்ளி, உச்சம்பட்டியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அம்மா மினி கிளினிக் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்து கொண்டு மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பேசினார். அமைச்சர் அன்பழகன் பேசும்போது கூறியதாவது:- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கிராமப்புற மக்களும் மருத்துவ சேவைகளை எளிதில் பெற வேண்டும் என்பதற்காக 2001-2006 ஆட்சிக்காலத்தில் ரூ.571 கோடி மதிப்பில் தாலுகா மருத்துவமனைகளை மேம்படுத்தினார்.

mini clinic,minister,speech,village,city ,மினி கிளினிக்,அமைச்சர்,பேச்சு,கிராமம்,நகரம்

அதன்படி பாலக்கோடு, தர்மபுரி, அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தாலுகா மருத்துவமனைகள் ரூ.24 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டன. அதேபோன்று மாவட்டத்தில் ஒன்பது ஆரம்ப சுகாதார நிலையங்களும் 30 படுக்கைகளாக தரம் உயர்த்தப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 41 அம்மா மினி கிளினிக்குகள், நகர பகுதிகளில் 2 அம்மா மினி கிளினிக்குகள் என மொத்தம் 43 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படுகிறது.

இந்த அம்மா மினி கிளினிக்குகள் கிராமப்புற பகுதிகளில் காலையில் 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலையில் 4.00 முதல் 7.00 மணி வரையிலும் செயல்படும். நகர பகுதிகளில் காலையில் 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலையில் 4.00 முதல் 8.00 மணி வரையிலும் செயல்படும். இந்த அம்மா மினி கிளினிக்கில், புற நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணிகள் பரிசோதனை, தாய் சேய் நல பணிகள், தடுப்பூசி போடுதல், அவசர சிகிச்சைகள் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்.

Tags :
|