தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 103.93 அடியாக உயர்வு
By: Monisha Wed, 09 Dec 2020 12:11:13 PM
கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை ஆகியவற்றால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று முன்தினம் அணைக்கு விநாடிக்கு 6 ஆயிரத்து 139 கன அடியாக நீர்வரத்து இருந்தது. நேற்று நீர்வரத்து 7 ஆயிரத்து 99 கன அடியாக அதிகரித்தது. இன்று காலையில் மேலும் 452 கன அடி அதிகரித்து விநாடிக்கு 7 ஆயிரத்து 551 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம் நீர்மட்டம் 103.14 அடியாக நீடித்தது. நேற்று 103.52 அடியாக உயர்ந்தது. இன்று காலையில் நீர்மட்டம் மேலும் உயர்ந்து 103.93 அடியாக அதிகரித்தது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.