மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது... நீர்மட்டம் 98.20 அடியாக உயர்வு!
By: Monisha Thu, 24 Sept 2020 12:47:35 PM
கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி வரை காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையை வந்தடைந்தது.
இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாள்தோறும் உயர்ந்த வண்ணம் இருந்து வருகிறது. அதாவது கடந்த 21-ந் தேதி காலை 89 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இரவு 89.92 அடியாக உயர்ந்தது. நேற்று முன்தினம் இரவு 3 அடி உயர்ந்து 93.43 அடியாக இருந்தது. இந்தநிலையில் நேற்று இரவு மேலும் 3 அடி உயர்ந்து 96.87 அடியாக உள்ளது.
இந்தநிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று குறைந்தது. அதாவது நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று 49 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருவதால் கடந்த 2 நாட்களாக வேகமாக உயர்ந்து வந்த அணையின் நீர்மட்டம் தற்போது மெதுவாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 96.87 அடியாக இருந்த நிலையில் தற்போது 98.20 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதமும், கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 850 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.