மினி கிளினிக் ஏழை மக்களுக்கான திட்டம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
By: Monisha Fri, 18 Dec 2020 12:25:26 PM
சேலம் பனமரத்துப்பட்டி அருகே வாணியம்பாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மினி கிளினிக்கை திறந்துவைத்த பின்னர் முதலமைச்சர் கூறியதாவது:- சேலம் மாவட்டத்தில் 100 இடங்களில் மினி கிளினிக் அமைக்கப்பட உள்ளது.
ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காகவே மினி கிளினிக் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. கொரோனா தடுப்புப்பணிக்காக மாவட்டந்தோறும் சென்று நேரடியாக ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறேன்.
வீரபாண்டி பிரிவில் ரூ.45 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது. இரண்டு பேருக்கும் மக்கள்தான் வாரிசு. அ.தி.மு.க. அரசு நேரடியாக மக்களோடு பேசி வருகிறது.
பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களுக்கு அ.தி.மு.க. அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. வீடியோ கான்பரன்சிங் முறையில் பேசும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருகிறார் என்று கூறிய முதலமைச்சர் மக்களை சந்திப்பது பெரிதா? அல்லது வீட்டிலேயே உட்கார்ந்து பேசுவது பெரிதா? என்று கேள்வி எழுப்பினார்.