ரூ. 40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நாகை மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் கைது
By: Monisha Sat, 12 Dec 2020 11:19:23 AM
திருவாரூர் சாமி மடத்தெருவை சேர்ந்த துரைசாமி(வயது 58) அரிசி ஆலை அதிபர். இவருடைய ஆலை செயல்பாட்டிற்கான காற்று மற்றும் நீர் உரிமத்தை புதுப்பிப்பதற்கு நாகை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த உரிமத்தை புதுப்பிக்க ரூ. 40 ஆயிரம் லஞ்சம் தருமாறு துரைசாமியிடம் மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் தனராஜ் கேட்டுள்ளார்.
இந்நிலையில் லஞ்சம் தர விரும்பாத துரைசாமி, இதுகுறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில், நேற்று முன்தினம் ரசாயனம் தடவிய ரூ. 40 ஆயிரத்தை துரைசாமி லஞ்சமாக என்ஜினீயர் தனராஜிடம் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில், செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ள தனராஜூக்கு சொந்தமான வீட்டில் லஞ்சமாக பெற்ற பணத்தை பதுக்கி வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். அதன் பேரில், திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு 10 பேர் கொண்ட சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊரப்பாக்கம் சத்யபிரியா நகரில் உள்ள தனராஜ் வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது அவரது வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக ரூ. 57 லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் இது தவிர அங்கு பணமதிப்பு இழப்புக்கு முன்பு புழக்கத்தில் இருந்த சுமார் ரூ. 2½ லட்சமும் இருந்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக என்ஜினீயர் தனராஜூவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் நாகை மாவட்டதில் அவர் குடியிருந்து வந்த வாடகை வீட்டில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.