வென்டிலேட்டர் தயாரிக்க 3 இந்திய நிறுவனங்களுக்கு உரிமம் வழஙகியது நாசா
By: Nagaraj Sun, 31 May 2020 10:53:38 AM
வென்டிலேட்டர் தயாரிக்க உரிமம்... கொரோனா நோயாளிகளுக்கான வென்டிலேட்டர் தயாரிக்க 3 இந்திய நிறுவனங்களுக்கு நாசா உரிமம் வழங்கி உள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 61 லட்சத்தை நெருங்கி வருகிறது. கொரோனா பாதித்தவர்களுக்கு முக்கிய தேவையாக செயற்கை சுவாச கருவிகள் தான் அதிகளவில் தேவைப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்காக உள்நாட்டில் வென்டிலேட்டர்களை (செயற்கை சுவாச கருவிகளை) வடிவமைத்து தயாரிப்பதற்கான உரிமத்தை 3 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வழங்கி உள்ளது.
பெங்களூருவில் உள்ள ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ், புனேயில் இருக்கிற பாரத் போர்ஜ், ஐதராபாத்தில் செயல்படுகிற மேதா சர்வோடிரைவ்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள்தான் இந்த உரிமத்தை பெற்றுள்ளன. மேலும், 18 பிற நிறுவனங்கள் முக்கியமான சுவாச உபகரணங்களை தயாரிக்க நாசாவால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 8 நிறுவனங்கள் அமெரிக்காவிலும், 3 நிறுவனங்கள் பிரேசிலில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.