கொரோனா பரவல் காரணமாக 8 மாதங்கள் கழித்து தனது குழந்தையை சந்தித்த நேபாள வாலிபர்
By: Karunakaran Wed, 25 Nov 2020 3:37:17 PM
நேபாள நாட்டில் காட்மண்டு பகுதியை சேர்ந்த யுப்ராஜ் பூசல், துபாயில் உள்ள தனியார் கல்லூரியில் நீச்சல் குளத்தின் பாதுகாப்பு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கர்ப்பிணி மனைவி மினா சொந்த ஊரில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் யுப்ராஜின் மனைவிக்கு ஜலந்தா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில் மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு பலியானார். அப்போது கொரோனா பரவல் காரணமாக அனைத்து நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடுவதாக அறிவித்திருந்தது.
ஊரடங்கு காரணமாக யுப்ராஜ் பூசல் தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை. இதனால் தொடர்ந்து 8 மாதங்கள் மனைவியை இழந்து தனது குழந்தையை காணாமல் தவித்து வந்தார். இந்நிலையில் சக ஊழியர்கள் உதவியுடன் பண உதவி பெற்று சொந்த ஊருக்கு சென்றார்.
அங்கு காட்மண்டு பகுதியில் மலைக்கிராமம் ஒன்றில் சிறிய குடிசையில் தனது குழந்தை ஜலந்தாவுடன் விடுமுறையை கழித்து வருகிறார். தொழிலாளியான இவர் அடுத்த மாதம் இறுதியில் துபாய் திரும்ப உள்ளார். மனைவியை இழந்த நிலையில் 8 மாதங்கள் கழித்து குழந்தையை சந்தித்த சம்பவம் துபாயில் பலரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.